அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் யோர்க்கர் மன்னன் என்று உலகளவில் வர்ணிக்கப்படுபவருமான லசித் மலிங்க அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மலிங்க சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இருபதுக்கு-20 தொடர்களில் மட்டுமே பங்கேற்று வந்த அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் விளையாடினார்.
அதன் பிறகு எந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை இவர் மீண்டும் இலங்கை அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டது.
இது குறித்து பேசியிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தரப்பில் மலிங்கவை அடுத்து வரும் சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் ஆட வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. எனவே அதற்காக அணியை தயார் செய்ய அணியில் லசித் மலிங்க தேவை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் இருபதுக்கு-20 உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக லசித் மலிங்க அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் எனது இருபதுக்கு-20 காலணிகளுக்கு ஒய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றிகள் எதிர்வரும் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 85 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.