இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
தயாராகுங்கள் வருகிறது தீர்க்க சுமங்கலி வரத்தை அருளும் வரலட்சுமி விரதம்.
வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்திற்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.
எந்த வீட்டிலெல்லாம் வரலட்சுமி விரத பூஜைகள் செய்யப்படுகிறதோ அந்த வீட்டுக்கு மகாலட்சுமி வருவாள். வருவதுடன் வீட்டிலேயே இருந்து வாசம் செய்வாள்.
தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இவ்விரதம் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி நாளை (20.08.2021) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க
இந்த நாளில் வீட்டினை சுத்தம் செய்து, பூஜையறையை அலங்கரித்து, விரதம் இருந்து, அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனை வணங்க செல்வ வளமும், தீர்க்க சுமங்கலி வரமும் கிடைக்கும்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி மற்றும் வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம்.
வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
வரலட்சுமி விரதத்தை சுமங்கலி பெண்களும், கன்னி பெண்களும், மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமிதேவியை அனுஷ்டித்து வழிபடும் மிக சிறப்பான விரதமாகும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர்.
அத்துடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பாக்கிய லட்சுமியின் அருளினால் மக்கட்பேறு பெறுகின்றனர். வரலட்சுமி என்பது வரன் தரும் லட்சுமி, வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும்போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும்.
வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம்
இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலிப் பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ, தொழில் சிறக்க வேண்டும் என்பதுதான்.
அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து கடைபிடிக்கக்கூடிய விரதமாகும்.
விரதத்தின் பலன்கள்
- மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
- உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
- மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
- திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- குழந்தை பாக்கிய தடைகள் நீங்கும்.
- ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.
- கணவன்-மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.