இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
சிக்கல்களும், குழப்பங்களும் நமது வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றது. சில நேரங்களில் வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும்போது, சரிவுகள் ஏற்படும்போது நம்முடைய வாழ்க்கை, சரியான பாதையில் தான் செல்கிறதா என்ற குழப்பம் நம்மில் பல பேருக்கு இருக்கும்.
பிரச்சனை என்பது நம்மோடு முடிந்துவிடுவது அல்ல. நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கக்கூடியது. வாழ்க்கையில் தீராத சிக்கல்கள் இருந்தாலும், முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தாலும், குழப்பத்திலிருந்து தெளிவு பெற, குருபகவானை வேண்டி பரிகாரம் செய்யலாம்..!!
தீராத குழப்பத்திற்கு தீர்வு தரும் குருபகவானின் வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு என்றாலே வியாழக்கிழமை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த பரிகார பூஜையும் வியாழக்கிழமை அன்று செய்வது சிறப்பினை தேடித்தரும்.
வீட்டின் அருகில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கும் கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் ‘மேதா சுக்தம்” எனும் மந்திரத்தை சொல்லி தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுமாறு சொல்லி விடுங்கள்.
இந்த மேதா சுக்தம் என்று சொல்லப்படும் மந்திரம், தட்சிணாமூர்த்திக்கும் சொல்லப்படும், சரஸ்வதி தேவிக்கும் சொல்லப்படும். வாழ்க்கையில் நல்ல வழியைக் காட்டக்கூடிய தட்சிணாமூர்த்திக்கு இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யும்போது, நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும்.
கோவிலுக்கு செல்லும்போது 2 மாதுளம் பழங்கள், கொண்டைக்கடலை மாலை, முடிந்தால் கொண்டைக்கடலையை வேக வைத்து நிவேதனமாக எடுத்து செல்லலாம். இரண்டு மாதுளம் பழங்களை குருபகவானின் பாதங்களில் வைத்து, பூஜை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.
இந்தப் பொருட்களையெல்லாம் தட்சிணாமூர்த்திக்கு படைத்து உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, இரண்டு நல்லெண்ணை தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, தட்சிணாமூர்த்திக்கு முன்பாக அமர்ந்து 10 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்யுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இருள் விலக இந்த வழிபாட்டு முறை உதவியாக இருக்கும்.
தொடர்ந்து 13 வாரங்கள் வியாழக்கிழமையில் இந்த பரிகார வழிபாட்டினை செய்து வரலாம். வாழ்க்கையில் அவசரமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும் என்ற தருணத்தில், சிக்கி தவிப்பவர்கள் தொடர்ந்து 13 நாட்கள் இந்த வழிபாட்டை செய்தாலும் நல்ல பலனை பெற முடியும்.
பரிகாரத்தை தொடங்கும் நாளை மட்டும் வியாழக்கிழமையை வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யலாம்.
- குணமிகு வியாழ குரு பகவானே
- மனமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
- பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
- கிரக தோசமின்றி கடாஹித்தருள்வாய்
- குருவே சரணம் உந்தன் திருவடி சரணம்