உண்மையில் நீங்கள்தான் முடிவு எடுக்கிறீர்களா ?
நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. எந்த துறையில் படிக்க வேண்டும், யார் நமது வாழ்க்கை துணையாக வர வேண்டும், எந்த வகையான துறையில் தொழில் செய்ய வேண்டும், எவ்வாறான குணாதிசயங்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பன போன்ற மிகப்பெரிய முடிவுகளில் இருந்து இன்று என்ன உணவு, எத்தனை மணிக்கு உறக்கம், இன்றைக்கு படம் பார்க்கலாமா வேண்டாமா என்பது போன்ற சிறிய முடிவுகள் வரை ஒவ்வொரு நொடியும் “முழுமையான கவனத்துடனோ” அல்லது “பகுதி கவனத்துடனோ” சில சமயங்களில் “கவனமின்றியோ” நாம் எடுக்கும் முடிவுகள் நாம் வாழ்க்கை பாதையை மாற்றும்.
ஆனால் இதனை வாசிக்கும்போதே சிலருக்கு சந்தேகம் எழுந்திருக்கலாம். என்ன படிக்கிறோம், யாருடன் வாழ்கின்றோம் என்பதை முடிவு செய்யும் பெற்றோர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள், அதுமட்டுமில்லாது நாம் என்ன உண்ண முடிவெடுக்கிறோம் என்பதைத் தாண்டி அதனை வாங்கக்கூடிய பணம் நம்மிடம் இல்லாமல் போக வாய்ப்புண்டு; ஆகவே, நாம் உணவு உண்பது என்பதை முடிவு செய்யும் வசதி பணத்துக்கு உண்டு. அல்லவா ? ஆக இவ்வாறான விடயங்கள் நமக்கு வெளிப்படையாக மற்றும் அறியக்கூடிய வகையில் உதாரணங்களாக அமைகின்றன. ஆனால், உண்மை என்ன தெரியுமா ?
நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் இதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டதுவே. ஆம். நம்பக் கடினமாக இருக்கலாம். அனால் இது உண்மையான மற்றும் நிரூபிக்கக் கூடிய தத்துவம்.
ஏன் நம்ப வேண்டும் என்கிறீர்களா ? இதோ ஒவ்வொரு படியாக முன்னோக்கிச் செல்வோம்…
நிகழ்தகவுகள்
இதற்கு முன்னர் நீங்கள் இதனைப் பற்றி கேள்விப்பட்டிருந்தால் நல்லது. இல்லையெனின் கவலைப்பட வேண்டாம். எளிய உதாரணங்கள் இதோ..
- நாணயத்தை சுண்டினால் கிடைக்கக்கூடிய நிகழ்தகவுகள் தலை அல்லது பூ அதாவது 2 நிகழ்தகவுகள்.
- தாயக்கட்டையில் ஏதேனுமொரு இலக்கம் விழுவதற்கான நிகழ்தகவுகள் 6. அதனால் குறிப்பிட்ட ஒரு இலக்கம் விழ 1/6 வாய்ப்புண்டு.
இப்போது மனித வாழ்க்கை தொடர்பான உதாரணங்களுக்கு வருவோம். உயர்தரத்தில் நீங்கள் பாடம் ஒன்று தெரிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் என்ன ? கணிதம், உயிரியல், சட்டம், கலை என 6 அல்லது 7 உள்ளன என்போம். அதில் ஏதாவது ஒன்று; ஆகவே 1/7. ஒரு பெண் அல்லது ஆணை மணப்பதற்கான தெரிவு ஆம் / இல்லை. இரண்டில் ஒன்று. இது புரிந்துவிட்டதா?
சரி இவ்வாறான நிகழ்தகவுகள் எந்தளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளவை. இவை எவ்வாறான முடிவுகளுக்கு இருக்கின்றன ? சரியான முறையில் சிந்தித்தால் நாம் ஆரம்பத்தில் கூறியது போலவே நம்முடைய ஒவ்வொரு தீர்மானங்கள் இவ்வாறான சாத்தியப்பாடுகளுடன் தான் இடம்பெறுகின்றன. விளங்கும்படி சொன்னால் இது கிட்டத்தட்ட மரம் ஒன்று தண்டிலிருந்து கிளைகளாக பிரிந்து பின்னர் அதிலிருந்து ஒவ்வொரு கிளையும் சிறிய சிறிய கிளையாக பிரிவதைப் போன்றது.
சரி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்….
நிகழ்தகவுகளின் தொடர்ச்சி
நிகழ்தகவுகள் தொடர்பாக புரிந்திருக்கும் என்று நம்புவோம். இப்போது அதன் தொடர்ச்சி. முன்னைய தாயக்கட்டைக்கு வருவோம். தற்போது ஒரு தாயக்கட்டையை உருட்டுகின்றோம். இலக்கம் 5 வர வேண்டும். அது வருவதற்கான நிகழ்தகவு 1/6. மீண்டும் அதனை உருட்டுவோம். இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் இலக்கம் 5 வர வேண்டும் என சொல்வோம். இப்போது தனியாக இலக்கம் 5 வருவதற்கான வாய்ப்பு 1/6 ஆக இருந்தாலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு முறை குறித்த இலக்கம் வருவதற்காக எதிர்பார்க்கின்றதால், இம்முறை அந்த இலக்கம் விழுவதற்கான நிகழ்தகவு 1/36 (1/6 X 1/6). அதாவது நீங்கள் முயற்சி செய்யும் போது முப்பத்தாறு வித்தியாசமான முடிவுகள் கிடைத்தால் அதில் ஒன்று நீங்கள் எதிர்பார்த்தது போல இரண்டு முறை 5 விழுவது ஆக நிச்சயம் இருக்கும்.
இப்போது வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள். நீங்கள் தெரிவு செய்த பாடத்துறை ஏழில் ஒன்று எனக்கொள்வோம். அதில் நீங்கள் தெரிவு செய்த தொழில் துறை பத்தில் ஒன்று, அதனால் நீங்கள் வளர்ச்சி அடைந்துள்ளீர்கள் என்போம். திருமணம் நடக்கிறது. லட்சங்களில் ஒரு நபர். நீங்கள் இருவரும் இணைந்து எடுக்கும் வித்தியாசமான 3 தீர்மானங்கள். ஒவ்வொன்றுக்கும் ஆம், இல்லை என இரண்டு வாய்ப்புகள் எனப் போட்டு பார்ப்போம்.
1/7 X 1/10 X 1/100000 X 1/2 X 1/2 X 1/2 = 1/56,000,000
அதாவது நீங்கள் ஐந்து கோடியே அறுபது லட்சம் வித்தியாசமான வாழ்க்கை பாதைகளில் இந்த வாழ்க்கையை தெரிவு செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
நீங்களே சொல்லுங்கள்: இதை செய்தது யார் ?
நீங்களே சொல்லுங்கள். தாயக்கட்டையில் என்ன இலக்கம் விழுந்தால் காயை எவ்வாறு நகர்த்த வேண்டும், எப்படி நகர்த்தினால் வெல்லலாம் எனத் தெரிவது போலே, இந்த ஒவ்வொரு முடிவையும் நான் செய்யும் பொழுது இது, இது இவ்வாறு, இவ்வாறு நடக்குமென எதிர்பார்த்து செய்தீர்களா ? இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே உங்களால் மேற்கொள்ளப்பட்ட முடிவுதானா? இந்த ஐந்தரைக் கோடி முடிவுகளுக்கும் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க தயாராக இருக்கிறீர்களா ? நிச்சயமாக நம்மில் யாருமில்லை. அவ்வாறு இருந்தால் நம் வாழ்வில் நாம் துன்பப்படவோ இல்லை கவலைப்படவோ தேவையிருக்காது. வாழ்வில் ஒருமுறை கூட அழுதிருக்க மாட்டீர்கள்.
எதிர்பார்ப்பிலில்லாதவை
இங்குதான் முக்கியமான பாகம் வருகிறது.விபத்துக்கள் நடக்கலாம் அல்லது எதிர்பாராத விபரீதங்கள் என்றெல்லாம் கூறுகின்றோம். ஒரு வாகன விபத்துக்கு பின்னால் தங்கியிருப்பது வெறுமனே காலம்தான். அந்த நொடியில் அந்த இரண்டு பேரும் அந்த இடத்தில் இருந்திருக்கா விட்டால் அந்த விபத்து நிகழ வாய்ப்பிருக்காது.நிச்சயமாக ஒரு நொடியோ அல்லது ஒரு சென்ரிமீட்டர் இடைவெளியோ மாறியிருந்தால் விபத்து நடந்திருக்காது. அந்த இடத்தில் அந்த குறித்த நொடியில் அங்கு இருக்க வேண்டும் என்பது உங்களுடைய தீர்மானம்தானே. எத்தனை மணிக்கு எழும்புவது ? வீட்டை விட்டுக் கிளம்புவது என எல்லாமே…
உண்மையிலேயே நாம் மிகக் குறுகிய வட்டத்துக்குள் பார்ப்பதுதான் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. நினைத்துப்பாருங்கள்; இந்த கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு மட்டும்தான் இது பொருந்துமா அல்லது உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் இது பொருந்துமா ? நிச்சயம் எல்லாருக்கும் பொருந்தும். நீங்கள் அங்கு இருக்கும் போது, எதிர்ப்பக்கத்தில் இருப்பவனுடைய நிலையை முடிவு செய்ததும் அவர்தானே..
முடிவு எடுப்பது நீங்கள் மட்டுமல்ல
ஆகவேதான், 7 பில்லியன் மக்கள், நூற்றுகணக்கான பில்லியன் விலங்குகள், ஆயிரக்கணக்கான பில்லியன் தாவரங்கள், மீன்கள், பூச்சிகள் என ஒவ்வொன்றும் தனித்தனியே எடுக்கும் கோடிக்கணக்கான நிகழ்தகவுகளில் ஒவ்வொரு தீர்மானங்களும் இணைந்து தான் நீங்கள் வாழும் இன்றைய வாழ்க்கையை நிர்ணயித்து இருக்கின்றன.
நமது கையில் பிறப்பு இல்லையே ?
சில கேள்விகள் எழலாம். நான் இன்றைக்கு இருக்கும் நிலை என்னுடைய முடிவுகள் என ஏற்கலாம். ஆனால், உண்மையிலேயே என்னுடைய பிறப்பு என்னுடைய தீர்மானம் அல்லவே என. ஆனால் உண்மை அதுவல்ல.. சில சமயங்களும், விஞ்ஞானமும் ஏற்ற கருத்து மறுபிறப்பு. ஆம், இந்த அண்டத்தில் எந்த ஒரு திணிவோ சக்தியோ ஆக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாது. திணிவு சக்தியாக்கப்படலாம். சக்தி திணிவாக்கப்படலாம். புதிதாக உருவாகாது. சற்று யோசியுங்கள். கயிறில் கட்டி சுற்றும் ஒரு கல்லில் திடீரென இன்னொரு கல்லைக் கட்டினால் என்னாகும். வேகமிழந்து வீழும் அல்லவா? அதைப்போலவே பிறப்பும் இறப்பும் உலகத்துக்கு தாக்கத்தை செலுத்தும். ஆனால் அது நடக்கவில்லை ஏனெனில் புதிதாக உருவாகவில்லை. பதிலுக்கு உருமாறியிருக்கிறது.
ஆக நம் கையில் எதுவும் இல்லையா ?
உண்மையை சொல்வதென்றால் “இருக்கு ஆனா இல்லை”. இப்படி யார் வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் புகுந்து விளையாடலாம் என்றால் வாழ்கையின் கதியென்ன ? அதனால் தான் நாம் இந்த பிரபஞ்சத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்கிறோம், பிரபஞ்சத்தின் விதிகள் விளையாட்டு நியதிகள் போன்றவை. எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் பொதுவான நியாயமானவை.
எங்கே அழுத்தம் குறைவோ அங்குதான் மின்சாரம் பாயும். அங்குதான் நீர் பாயும். எங்கே தேவையுள்ளதோ அங்குதான் இலத்திரன் பரிமாற்றப்படும்.அதே போலதான் நாமும் நம் உயிருக்கான கடமை எங்குள்ளதோ அங்குதான் உருமாறி செல்கின்றோம். ஆகவே கடந்தது நம் கையில் இல்லை. ஆனால், இயற்கை நியதிகள் படி நீங்கள் எடுக்கும் ஐந்தரைக்கோடியில் ஒரு தீர்மானம் நல்லதாக இருப்பின் அதனால் நன்மை உங்களுக்கு மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த உலகுக்கும்தான்.
ஆகவே போனது போகட்டும். இப்போது நீங்கள் எடுக்கப் போகும் முடிவுகளுக்கான வாய்ப்புகளும் நிகழ்தகவுகளும் இதற்கு முன்னர் உங்களாலேயே முடிவு செய்யப்பட்டது. அதில் சரியான மற்றும் நல்லதை தெரிவு செய்யுங்கள். அது பிற்காலத்தில் நீங்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு நீங்களே உருவாக்கும் வாய்ப்பாகும். ஆக ஒட்டுமொத்தத்தில் சொல்வதானால் எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது. ஆனால் உங்கள் கையில் மட்டும் இல்லை எனப் புரிந்துகொள்ளுங்கள்.
இன்று இந்த கட்டுரையை நான் எழுத எடுத்த முடிவும், அதனை நீங்கள் வாசிக்க எடுத்த முடிவும் அதனால் ஏற்படக்கூடிய புரிந்துணர்வுகளும் விளைவுகளும் இன்னும் பல உயிர்களுக்கு நன்மையாய் அமையுமென பிரார்த்திக்கிறேன்.
இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை பார்வையிடவும்.
Wall Image Source : https://www.livescience.com/65384-cosmology.html