கோவிட்-19 தடுப்பூசி குறித்த குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியனுக்கு செல்வதற்கு அனுமதி இல்லையென்று சமீபத்தில் சர்ச்சை தொடங்கியது. பின்னர், ஐரோப்பிய யூனியனின் இந்திய தூதர் முன்வந்து, அப்படி எவ்விதத் தடையும் இல்லையென்று கூறினார்.
இதேபோல், தடுப்பூசி மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த பல சந்தேகங்கள் மக்களிடையே இருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அதிகாரபூர்வ இணையதளங்களின் உதவியோடும் தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் சுரேஷ்குமார், சித்ரா ஆகியோரின் ஆலோசனைகளோடும் வெளிநாட்டுப் பயணம் மற்றும் தடுப்பூசி குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வோம்.
வெளிநாடுகளுக்குச் செல்வ தென்றால் நம் ஊரில் போடப்படும் கோவிஷீல்டு கோவாக்சின் போன்றவையே போதுமானவையா அல்லது அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய, சீன தயாரிப்புகளைத்தான் போட்டுக் கொள்ள வேண்டுமா?
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, அந்தந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசியைத்தான் போட வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கோவிட்-19 தொற்று நோய்க்கான ஏதாவது ஒரு தடுப்பூசியைப் போட்டிருந்தாலே போதுமானது.
முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் ஐரோப்பாவில் அனுமதி மறுக்கப்படுபவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும்?
ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகளவில் எந்த நாட்டிலும் குறிப்பிட்ட ஒரு தடுப்பூசியைப் போட்டிருந்தால் தான் அனுமதிப்போம் என்றோ, சில தடுப்பூசிகளைப் போட்டால் அனுமதிக்க மாட்டோம் என்றோ இதுவரை சொல்லவில்லை. ஆகையால், முதல் டோஸ் கோவிஷீல்டு போட்டுக்கொண் டவர்கள், வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படுவது குறித்தும் வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது குறித்தும் பயம் தேவையில்லை.
முதல் டோஸ் வேறு தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்ய அங்கே ஏற்றுக்கொள்ளும் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாமா?
ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகள் தொடங்கவிருப்பதால், மாணவர்கள் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்க உள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இந்திய தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற குழப்பம் வந்ததையொட்டி, கோவாக்சின் போட்டுக் கொண்ட சிலர் உடனடியாக கோவி ஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
கோவிஷீல்டு குறித்த குழப்பங்கள் வந்ததால், அதைப் போட்டுக்கொண்ட சிலர், ஐரோப்பிய யூனியன் சென்ற பிறகு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டதற்கு, அங்கு பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.
கோவாக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்படும் நிலையில், அமெரிக்க தயாரிப்பு தடுப்பூசியை உடனடியாகப் போட்டுக்கொள்ளலாமா?
ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளனர். அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்குத்தான் கோவாக்சின் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
மற்றபடி கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்கா செல்வதில் எவ்விதத் தடையும் இல்லை. ஒருவேளை தேவைப்பட்டால் அங்கு சென்ற பிறகு அமெரிக்க தயாரிப்பு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
அதேநேரம், கோவாக்சின் தரமானது இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அதுகுறித்த தரவுகளை சமர்ப்பித்த பிறகு, அதற்கான அனுமதி கிடைக்கும். கோவாக்சின் போட்டபின், ஒருவர் அவசியத்தை முன்னிட்டு வேறு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்றாலும் அதனால் எந்தப்பயனுமில்லை.
ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியைப் போட்டிருந்தால்தான் ஒரு நாட்டுக்குள் நுழைய முடியும் என்ற நிலை வருவதற்கு வாய்ப்பில்லை.
ஒரு நாட்டில் அனுமதிக்கப்படாத பிராண்டு தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நிலையில், அந்த நாட்டுக்குச் செல்வதற்காக வேறு பிராண்டு தடுப்பூசியை எத்தனை நாள்கள் கழித்துப்போட்டுக் கொள்ளலாம்?
இந்த பிராண்டு தடுப்பூசி போட்டால்தான் ஒரு நாட்டுக்குள் நுழைய முடியும் என்கிற நிலை இதுவரை இல்லை என்கிற சூழலில் இந்தக் கேள்வியே தேவையற்றது. அதேசமயம், அவசரத்தை முன்னிட்டு, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே அவர்களுக்கு உடனடியாகவே வேறு தடுப்பூசி போடப் படுகிறது. ஆகையால், இதற்கு இன்னும் எவ்வித வழிகாட்டுதலும் வரையறுக்கப்படவில்லை.
உடனுக்குடன் வேறு வேறு தடுப்பூசிகளைச் செலுத்துவதால் உடலுக்கு/உயிருக்கு பாதிப்பு ஏற்படுமா?
அப்படி அடுத்தடுத்து வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களிடம், இதுவரை பெரியளவிலான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. ஒருவேளை எதிர் காலத்தில் பெருவாரியான மக்கள் இப்படி தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக் கொள்ளும் போதுதான் பக்க விளைவுகள் குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு தடவை போட்ட தடுப்பூசியின் வீரியம் எத்தனை நாள்களுக்கு இருக்கும்?
இது புதிய நோய் என்பதால், முழுமையான தரவுகள் நம்மிடம் இல்லை. ஃப்ளூ வைரஸ் களைப் பொறுத்தவரை, அவற்றுக்காகப் போடப்படும் தடுப்பூசியின் வீரியம் ஓராண்டுக்கு இருக்கும். கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டால் அதன் வீரியம் சுமாராக ஓராண்டுக்கு இருக்குமென்று இப்போதைய கணிப்புகள் கூறுகின்றன.
தடுப்பூசி பாஸ்போர்ட் என்றால் என்ன?
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக, ஒரு நாட்டுக்குள் செல்லும் ஒருவர் கட்டாய மாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதை பாஸ்போர்ட்டிலும் பதிவு செய்திருக்க வேண்டும். அதுதான் தடுப்பூசி பாஸ்போர்ட் எனப்படுகிறது. அதுகுறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
ஆனால், தற்போது அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒருவர் தடுப்பூசி போடவில்லை என்றால், அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும்.
மற்றபடி, தடுப்பூசி போட்டிருந்தால்தான் பயணிக்கவே முடியும் என்று சொல்லப் படவில்லை.
எந்தெந்த நாடுகளில் எந்தெந்த தடுப்பூசிக்கு அனுமதி?
ஐரோப்பிய யூனியன்: ஃபைஸர், அஸ்ட்ரா ஸெனிகா – ஆக்ஸ்ஃபோர்டின் வாக்ஸ் செவ்ரியா (Oxford / AstraZeneca – Vaxzevria, மாடர்னா (Moderna), ஜான்சன் & ஜான்சன், கோவிஷீல்டு (ஏழு நாடுகளில் மட்டும்).
கனடா: ஃபைஸர் பயோ என்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், கோவிஷீல்டு.
ரஷ்யா: ஸ்புட்னிக் வி (Sputnik V), கோவிவாக் (CoviVac), எபிவாக்கொரோனா (EpiVacCorona).
ஆஸ்திரேலியா: ஃபைஸர் பயோ என்டெக், ஜான்சன் & ஜான்சன், ஆக்ஸ்ஃபோர்டு – அஸ்ட்ராஸெனிகா.
இந்தியா: கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா.
மேலே குறிப்பிட்டவையெல்லாம் அந்தந்த நாடுகளில் பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் தான். இவற்றைப் போட்டிருந்தால் தான் அந்த நாடுகளுக்குச் செல்ல முடியும் என்று எந்தக் கட்டுப்பாடும் இதுவரை விதிக்கப்படவில்லை.
- தகவல் உதவி : தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் டாக்டர் சுரேஷ்குமார்
- தகவல் உதவி : தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் டாக்டர் சித்ரா
ஆரோக்கியமான டயட் வெளியேவும் செல்வதில்லை நானும் தடுப்பூசி போடவேண்டுமா?