இலேசேர் கதிர்களின் முக்கியத்துவம்
ஆதிகாலத்தில் மலைகளிலும் காடுகளிலும் உண்டு, உறங்கி வாழ்க்கை நடாத்தி வந்த மனிதன் காலப்போக்கில் நதிக்கரையில் தம் குடியேற்றங்களை அமைத்து ஓரிடத்தில் நிலைத்து நின்று சிந்திக்க ஆரம்பித்தான். அங்கிருந்து சிந்திக்க ஆரம்பித்த மனிதன் இன்று வரை சிந்தித்தவாருள்ளான்.
அவ்வாறு அன்று தொடக்கம் அவன் சிந்தித்த சிந்தனைகள் இன்று விஞ்ஞான யுகத்திலே பல சாதனைகளாக வளர்ந்து நிற்கின்றன. அன்று “நிலா நிலா வா! வா!” என நிலவை பூமிக்கு அழைத்த மனிதன் இன்று நிலவிற்கே சென்று வருகிறான். அன்று பறவையை பார்த்து அதிசயித்த மனிதன் இன்று பறவைக்கும் மேலாக பறக்கின்றான். ஏன் அவ்வளவு இன்று தன்னைப் போல இன்னொரு மனிதனையே படைக்கும் அளவிற்கு மனிதனும் வளர்ந்து விட்டான். விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. இவ்வாறு விஞ்ஞானம் சாதித்தவைகளை விபரித்து கூறுவதற்கு அளவே இல்லை. இவ்வாறான நாளுக்கு நாள் இடம்பெறும் கண்டுபிடிப்புகளுள் இலேசேர் கதிர்களின் கண்டுபிடிப்பானது மிக முக்கியமானதொன்றாகும்.
இலேசர் கதிரின் பண்புகள்
இலேசேர் கதிர்களானது சில சிறப்பான பண்புகள் கொண்ட ஒருவகை ஒளியலையாகும். பொதுவாக சூரியன்,சந்திரன்,மின்விளக்கு போன்றவற்றிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட கதிர்களைக் கொண்டிருக்கும்.அவற்றுள் ஒரே அலை நீளம் கொண்ட கதிர்கள் கூட அலை முகங்களின் தன்மையால் முரண்பட்டிருக்கும். அதாவது ஓர் ஒளியலையின் அலைமுகம் ஏறுமுகமாக இருக்கும்போது அதே ஒத்த அலைகளின் அலைமுகம் இறங்குமுகமாக இருக்கும். ஆனால் இலேசர் கதிர்களின் அலைநீளங்கள் யாவும் ஒரே அலை நீளங்களாகவும் அவற்றின் அலை முகங்கள் ஒத்த அலைமுகங்களாகவும் காணப்படும். இத்தகைய சீரான பண்புகளைக் கொண்டுள்ளதால் இவற்றினை சீரொளி என்றும் அழைப்பதுடன் இப்பண்புகளை அடிப்படையாக வைத்தே இவை பல தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இலேசர் கதிரின் தோற்றம்
அடுத்து இலேசர் கதிரின் உருவாக்கத்தை நோக்குவோமானால் இக்கதிர்கள் 1960ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி அமெரிக்க கூட்டு நாடுகளிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தின் மாலிபு என்னும் இடத்திலுள்ள ஹியூஸ் ஆய்வகத்தில் “தியோடர் மைமன் “(Theodore Maiman ) என்பவராலேயே முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.”சிவப்புக்கல்” அல்லது “கொம்பு ” எனப்படும் நகைகள் செய்யப் பயன்படும் விலையுயர்ந்த ஒரு வகைப் படிக்கல்லில் இருந்தே “தியோடர் மைமன் ” இலேசர் கதிர்களை உருவாக்கிச் சாதனை படைத்தார்.
இலேசர் எனும் சொல்லானது ஆங்கிலத்தில் முதலெழுத்துக் கூட்டலாக அமைந்த ஒரு சுருக்கெழுத்துச் சொல்லாகும். அதாவது Light Amplification of Stimulated Emission of Radiation என்பதன் சுருக்கமாகவே Laser என அழைக்கப்படுகிறது. அதாவது “கதிர் வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளி” என்பதே இதன் பொருளாகும். எனவே இது ஓர் மிகை நிரபிக் கருவியாகும்.
இலேசரின் முக்கியத்துவம்
பல்வேறு திண்மப் பொருட்களையும் கொண்டு உருவாக்கப்படும் சீரொளியானது இன்று நூற்றுக்கணக்கான தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்பட்டு பல பில்லியன் டொலர் வணிகமாக மாறியுள்ளது. உதாரணமாக சீரொளியானது சாதாரண இசைப் பெட்டிகளில் CD , DVD என்பவற்றிலிருந்து குறிப்பலைகலைப் பெறுவது, இசை நிகழ்ச்சிகளில் ஒளியலங்காரம் செய்வது, மருத்துவ சிகிச்சை முறை, போரின்போது இலக்குகளை துல்லியமாக தாக்குதல் போன்ற பல துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவத்துறையில் இலேசர்
முதலில் மருத்துவத் துறையை எடுத்து நோக்குவோமாயின் இக்ஸிரொளியானது மருத்துவத் துறையின் பல்வேறு சிகிச்சை முறைகளில் அளப்பரிய பங்கினையாற்றி வருகின்றது. அவற்றுள் சிலவற்றினை எடுத்து நோக்குவோமாயின் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் இலேசர் கதிர்களின் மூலமாகத் தகர்க்கப்படுகின்றன. அதாவது நாம் அளவுக் கதிகமான கொழுப்புணவுகளை உண்ணும் போது அவை இரத்த நாளங்களில் படிவடைகின்றன.இதனால் இரத்த ஓட்டம் பாதிப்படைந்து மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு உயிரையே பறித்துவிடும் அபாய நிலமை தோன்றியுள்ளது. இவ்வாறான நோயுள்ளவர்களுக்கு “Bypass Surgery ” எனும் அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்தது.
ஆனால் தற்போது மிக இரத்த நாள அடைப்புகளைச் சீர்செய்யும் அதி நவீன இலேசர் சிகிச்சையை லண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜோ, பிரிருக்ஸ் தலைமையில் கண்டுபிடித்துள்ளனர். இங்கு எக்ஸைமர் இலேசர் எனும் கண் சிகிச்சையில் பயன்படுத்தும் இலேசர் கருவியானது ரீட்டர் எனப்படும் மிக நுண்ணிய குழாயுடன் இணைக்கப்பட்டு இரத்த நாளங்களுக்கு இணைக்கப்படும். இதன் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கப்படுவதுடன் இலேசர் கதிர்களும் வெளிப்படுத்தப்படும். இதன்போது இலேசர் கதிர்களின் மூலமாக அடைப்புக்கள் வெடிக்கச் செய்யப்பட்டு சிறுதுகள்களாவதுடன் அவை இரத்த குழாய்களின் மூலமாகவே வெளியேற்றப்படுகின்றன.
ஆனால் இங்கு Bypass Surgery மூலமாக சிகிச்சை செய்யின் ஒரு பகுதியிலுள்ள அடைப்பையே நீக்கலாம், ஆனால் இலேசர் சிகிச்சையின் மூலமாக ஒரே தடவையில் உடலின் முழுப்பகுதியிலுமுள்ள அடைப்புகளை நீக்கிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதுமட்டுமல்லாமல் தற்போது மருத்துவத்துறையில் கருத்தரிப்பிற்காகவும், கண்சிகிச்சையின் போதும் இலேசர் கதிர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதுகாப்புத்துறையில் இலேசர்
இது தவிர இலேசர் போர் முறைகளிலும் கையாளப்பட்டு வருகின்றது. அதாவது இலேசர் கற்றை மூலமாக இலக்கை துல்லியமாகக் கணித்து அதைத் தாக்கி அழிப்பதற்காக இலேசர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வழமையாக போர் விமானங்களிலிருந்து வீசப்படும் வெடிகுண்டுகள் குத்துமதிப்பாக வீசப்பட்டு இலக்குகள் தகர்த்தப்படுகின்றன. இது நூறு சதவீதம் வெற்றியளிக்கும் என கூற முடியாது.ஆனால் இலேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி வீசப்படும் குண்டுகள் மூலம் நூறு சதவீதம் இலக்கைத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இங்கு ஏவுகணை போலிருக்கும் இக்குண்டுகளின் முன் பகுதியில் இலேசர் ஒளிக்கற்றையை உருவாக்கும் கருவி காணப்படும்.
தாக்க வேண்டிய இலக்கினை விமானம் அண்மித்ததும் விமானி இலேசர் ஒளிக்கற்றயை உருவாக்குவார். உடனே குண்டின் முன் பகுதியிலிருந்து வெளியேறும் ஒளிக்கற்றை இலக்கின் மீது படச்செய்யப்பட்டு குண்டு விடுவிக்கப்படும்.அப்போது குண்டானது ஒளிக்கற்றை பட்ட இலக்கைச் சீரிச் சென்று தாக்கி அழிக்கும். இத் தொழில்நுட்பத்தினை 1960களில் அமெரிக்கா உபயோகித்தாலும் இந்தியா அண்மையிலேயே தனது சொந்த முயற்சியால் மேற்படி இலேசர் குண்டினை உருவாக்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலேசர் கதிர்களின் பிரதிகூலம் பற்றி நோக்குவோமெனில் இவற்றினால் பெருமளவு ஆபத்து இல்லையாயினும் இலேசர் அச்சுப் பொறிகளில் இருந்து வெளியேறும் உப நுண்ணியளவு துணிக்கைகள் சுவாச நோய் ஏற்பட ஏதுவாக அமைகின்றன என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இலேசர் உபகரணங்களை நாம் பயன்படுத்தும் முறையிலும் அவற்றின் பிரதிகூலம் தங்கியுள்ளது. எனவே நாம் சரியான முறையில் இவற்றினை உபயோகித்துப் பயன் பெற வேண்டும்.
வேறுபட்ட புதிய தொழில்நுட்பத் தகவல்களை வாசிக்க தொழில்நுட்ப பக்கத்துக்கு செல்லவும்