இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
இந்த மொய்ப்பணம் என்பது அன்பைப் பகிரும் அன்பளிப்பு மட்டுமல்லாமல், முன்பொரு நாளில் பெற்றுக் கொண்ட அன்பளிப்பைத் திரும்ப வழங்கும் முறை என்றும், அந்த சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித் தேவைக்கு உதவும் வண்ணம் தரப்படும் பணம் என்றும், அதனால் தான், அன்றைய விலைமதிப்பு மிக்க தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களை ஒற்றைக்காசாக வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கல்யாணம், காது குத்து, கிடா வெட்டு போன்ற சுப நிகழ்ச்சியின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்?
ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அந்தக்காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்ப்பணமும் அந்தக்காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களாக இருந்தன.
அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மன நிறைவு இருந்தது. ஆனால் நோட்டுக்கள் என்கிற ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.
நோட்டு தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.எனவே ரூபாய் தாளை மொய்ப்பணமாக கொடுப்பவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது.
எனவே மொய்ப் பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.
அந்தக்காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன. எனவே தான் நம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐந்நூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
விசேஷத்தில் மொய் செய்வதும் ஒரு நல்ல பழக்கம் தான். அதனால் தான் முன்னோர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
எது எப்படியென்றாலும் நமது தமிழர் நடைமுறையில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மொய்யின் மெய்ப்பொருள் இது ஒரு மிகச்சிறந்த அன்பு பகிர்தல் என்பது நன்கு புரிகிறது!