நொடி, நம் எண்ணங்களின் வேகம் செயல்களின் வேகத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகம். விளக்க முடியாத சூழலுக்குள் மாட்டிக் கொண்ட ஒருவனின் நொடிக்கு நொடி வாழ்வு இந்தக் கதை.
நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
நொடி
தலையை இறுக்கமாகப் பற்றியிருந்தான்.பெரு விரல் உட்பட 5 விரல்களும் பின்னந்தலை பிடரியில் அழுந்திக் கிடந்தது. கிடைத்தது வாய்ப்பென்று பூச்சியைமுழுமையாக அமத்திய சிலந்தியாக கை விரல்கள் பின் தலையை ஆக்கிரமித்தன. ஸ்தூலமான ஆக்கிரமிப்புகள் வர்ணனைக்கு இலகுவானவை. இப்போது அவன் மனதிலிருக்கும் அவனுக்கே புரியாத ஆக்கிரமிப்பை விளங்கப்படுத்தும் இமாலயக் கடமை எனக்கு. முயற்சிப்போம்…
இவ்வாறன அனுபவங்கள் அவனுக்கு புதிதானவை; புதிரானவை. சமயங்களில் எண்ணங்களின் விசித்திர தன்மையை எண்ணி அவன் வியப்பதுண்டு. நீரில் மிதக்கின்றன மீன் தான், நிலத்துக்கு வந்து பல்லி ஆகி, உடும்பாகி, முதலை ஆகி, டைனோசர் ஆக மாறி, அது அழகான, வெள்ளை சட்டை போட்ட பெண்ணை கண்டு,அவளை கடித்து சாப்பிட வர, மலையளவு பெரிய குரங்கு வந்து அவளை மீட்டு, கண்ணும் கண்ணும் நோக்க…..
அய்யையையையோ
இதுதான் வேலை; அவனுக்கும் எனக்கும். எங்கள் எண்ணங்களின் வடிவங்கள் ஆடையில் உள்ள நூல் அல்ல.. வானத்திலிருந்து இழுக்கப்படும் இழைகள். வானிழைகள். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.
கதைக்குள் வருவோம்.
எங்கே ஆரம்பித்தேன்.. மீனாகி பல்லியாகி.. ஆஹ்..
இவ்வாறு ஒரு விடயம்தான் எல்லாமுமாக பரிணமிக்கின்றது என்பதுபோல எண்ணங்களும் ஒன்றிலிருந்து ஆயிரமாக பரிணமிப்பதை அவன் உணர்வான்.. ஆனால் விளங்கப்படுத்துவது கடினம்.
இப்போது அவன் ஆட்பட்டிருக்கும் எண்ணமும் அவ்வாறானதுதான்.
ஏதோ ஒரு ஆதிமூலத்தில் ஏற்பட்ட அடங்காத கிளர்ச்சி, அவன் உணர்வு நரம்புகளை தூண்டி விட்டிருந்தது. என்றுமே நடக்காத ஒரு விடயம் இன்று நடந்து விட்டதாலோ என்னவோ அவனுடைய அறிவு இந்த இடத்தில் அவனுக்கு தோள் கொடுக்க முற்றிலுமாக மறுத்து விட்டிருந்தது. உடல் ? வெறித்து தலையை பிடித்துக் கொண்டிருக்கும் கைகளைத் தவிர மற்றன எல்லாம், எங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல அவனைச் சுற்றியிருந்த சூழலின் போக்கில் போய்க் கொண்டிருந்தன. விளக்கமாகச் சொல்வதானால், பேருந்தின் ஓட்டத்தில் உடல் ஓடிக்கொண்டிருந்தது; குலுக்கத்தில் குலுங்கிக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு கீழே இருக்கும் மெல்லிய கீற்றில் சற்று தூக்கி வைக்கப்பட்ட இடதுகால் ஓய்ந்திருக்க, பேருந்து தரையில் முழுவதுமாக பதிந்து கிடந்த வலது கால் சிறிது மேலதிக அழுத்தம் பெற்றிருந்தது. எப்படி இருந்தால் என்ன, அவனோடு ஒத்திசைவதாக மட்டும் அவை இல்லை.
இவ்வளவும் சம்பவம் நடந்து ஒரு நொடியில்..
அடுத்த நொடி ஆரம்பமாக, நூற்றுக்கு நூறு வீதம் எண்ணங்களால் அழுந்திக் கிடந்தவனுக்கு, ஒரு வீத விடுதலை. தூக்கம் முடித்தவன் கண்ணில் படும் முதல் கற்றை விடியலை உணர்த்துவது போல, அவனது தொண்டையில் ஏற்பட்டிருந்த கனம் தன் மனதின் வீரிய விகர தாபங்களை அவனுக்கு எடுத்துக் காட்டின. அழகாக இருக்கின்ற பெண்ணொருத்தியின் / ஆணொருவனின் கண்ணைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை அவன் அல்லது அவள் மென்மையாக திரும்பிப்பார்த்து, வஞ்சனையில்லாமல் வழிந்து கொண்டிருக்கும் உங்கள் காதல் முகத்தை சுவீகரித்து புன்னகைக்கிறான்/ள். அடுத்த நொடி பின்னந்தலையில் உச்சகட்ட வலி.. சுர்ரென்று உறைக்கிறது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சிந்திக்கும் நிலையிலும் நீங்கள் இல்லை. பார்க்க கேட்க எதற்கும் தோன்றவில்லை.
தூய, நூறு வீத வலி….
அந்த அதே உணர்வுதான், அவனுக்கு.. பூச்சியத்திலிருந்து நூறாக உங்களுடைய உணர்ச்சிகள் நீங்கள் கிரகிக்கும் முன்பே பொங்கியெழுந்த நிலை அது. அதிலிருந்துதான் தற்பொழுது ஒரு வீதம் மீண்டிருக்கிறான். இன்னும் சம்பவங்கள் தொடர்பான எண்ணங்கள் அவள் மனதில் எழவில்லை. தூய நூறு வீத வெறுமையில் இருந்து அவனுடைய உணர்வுகளை கிரகிக்க தொடங்கியிருக்கிறான். தொண்டை பாரமாக இருக்கிறது. தலையை இறுகப் பற்றி இருக்கிறான்.
ஆகவே மனதில் ஏதோ குழப்பம் இருக்கிறது.
மூன்றாவது நொடி,
சுற்றத்தை பார்க்கிறான். தன்னுடைய உடல் குலுங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் பழைய கால வடிவமைப்பு தான் காரணம். ஆம் நான் பேருந்தில் இருக்கிறேன். எதற்காக ? இன்று என்ன நாள் ? என்னுடைய கால் ஏன் இடது பக்கத்தில் வலிக்கிறது ? இந்த பேருந்து எங்கே செல்கிறது ? காது பக்கமாக கேட்கும் சத்தம் என்ன ? என்னுடைய வலது தொடை உரசி கொண்டிருப்பது எதனோடு ? என் கண்முன்னே பளிச்சிடுகின்ற முன்பின் தெரியாத இந்த பெண் முகம் யாருடையது ? முன்பின் தெரியாத முகம் ஏன் எனக்கு நினைவில் இருப்பதாக தோன்றுகிறது ? ஆஆஆஆஆஆஆஆ…
நான்காவது நொடி,
அடாடா வசந்தம்.. அதுதான் வசந்தம்.. காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா ?.. அஹ்… லஜ்ஜாயவதியே.. என் பிளே லிஸ்டில் இருக்கும் பாட்டு. நான் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று புறப்பட்டு வந்தேன்; நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விகாரமாதேவி பூங்கா..ஆ… இன்று காலையில் புறப்பட்டு பேருந்தில் ஏறி இவ்வளவு தூரம் வந்துவிட்டு இருக்கிறேன்.. வெள்ளவத்தையில் தான் இறங்க வேண்டும் எந்த அவசரமும் இல்லை. சாதாரண பேருந்து பயணமா என் மனதை இவ்வளவு குழப்பியது ? இல்லை என்ன நடந்தது? பேருந்து செல்வதற்கு நான் ஏன் இவ்வளவு குழம்ப வேண்டும் ? என்னுடைய அறை படித்த ஆதிமூல மனதில் ஏன் அடங்காத கிளர்ச்சிகள் உருவாகியிருக்க வேண்டும் ? சாதாரணமாக உட்கார்ந்து போவதும், பாட்டு கேட்பதும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வழக்கமானது தானே ? பிசை பிசை என்று இரண்டு நொடிகளில் என்னை மொத்தமாக பிசைந்து எடுத்த அந்த வலிக்குக் காரணம் என்ன ?
ஐந்தாவது நொடி,
என் தொடையை தொட்டுக் கொண்டிருப்பது ஒரு கால் அல்ல.. இது ஒரு கை… மென்மையாக, தொட்டுப் பார்த்தாலே சந்தோஷம் தருவது போன்ற ஒரு கை.. சின்னதாக மோதிரமும் அணிந்திருந்தது அந்த கை. ஏறும் போது எனக்கு பக்கத்தில் யாரும் இருக்கவில்லை. எப்படி வந்தது இந்த கை ?
மீண்டும் முதல் இரண்டு நொடிகளுக்கு உண்டான பதற்றம் அவனை சூழ்ந்து கொள்கிறது. தலையை நிமிரலாமா ? வேண்டாமா ? எதுவாக இருந்தாலும் இவ்வளவு மென்மையான கை.. ஆணோ.. பெண்ணோ.. பேருந்து போன்ற பொது இடத்தில் என்னை தொட்டு இருக்கக் கூடாது. கேட்பது நியாயம்தான். தலை நிமிர்வோம்..
அந்தக் கையை பாதையாக பயன்படுத்தி தலை உயர்த்தினான். மென்மையே உருவம் என நெடுங்கோடு நீண்டிருந்த அந்தக் கை தோள்மூட்டு வரை சென்று அங்கிருந்து அவளது கழுத்து; முகம்; ஆம் அது ஒரு பெண்.
நொடி ஆறு,
“தூக்கத்தில அப்படியே என் மேலே விழுந்துட்டிங்க.. அதுதான் எழுப்பினேன்… sorry…” காதுகளும் கண்களும் செய்திகளை வாங்குவதை குறைக்க, அவன் ஆரை மியூட் நிலைக்கு போயிருந்தான். வாங்கிய செய்திகளை கொஞ்சம் கொஞ்சமாக கிரகிக்கத் தொடங்கியிருந்தது அந்த மந்த புத்தி. செய்க்.. “என்ன வேலை டா செஞ்சுருக்கா..” மந்தபுத்தி கிரகித்ததும் அவனுக்கு முதலாக அனுப்பிய பதில் அது. பதிலோடு சேர்த்து தண்டனை சீட்டும் அனுப்பப்பட்டது.. “மன்னிப்பு கேளுடா மாங்கா மடையா… ” கொஞ்சம் காட்டமான மந்த புத்திதான்.
ஐயையோ.. sorry ங்க.. தெரியாம…
“அது என்னடா தெரியாம பொண்ணு மேல சாய்றது.. பசங்க மேல எப்பவாவது சாய்ந்து இருக்கியா ? ”
முன்னெப்போதும் நடக்காதது நடந்தது. அதுவும் பெண்ணோடு. இதனை சொல்லாமல் சொல்வதற்கு மந்தப்புத்தி கேட்ட கேள்விதான் அது.. வெட்கத்தால் மேலும் குறுகிப் போனான். அந்தப் பெண்ணிடம் என்ன சொல்வது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு உதவி செய்ய வேண்டிய புத்தியே செருப்பால் அடிக்காத குறையாய் திட்டிக் கொண்டு இருந்தது.
ஏழாவது நொடி,
it’s ok.. but கைய மட்டும் கொஞ்சம் விட்டீங்கன்னா…
கையா ? மந்தப்புத்திக்கும் அதிர்ச்சி அவனைப்போலவே..
திடீரென்று சுய நினைவு வந்த மந்தபுத்தி கேட்டது..
வீட்டில் இருந்து கொண்டு வந்த ஹெல்மெட் எங்கே.. ??
உச்சந் தலையில் கொட்டியது போலும் அவன் மந்தப்புத்தி. சுள்ளென்று உறைத்தது.
“பட்டென்று மடியைப் பாரடா.. எனக்குனு வந்து வாச்சியே..”
மந்தப்புத்தியின் கட்டளைகள்..
கண்கள் மீண்டும் செய்திக்காக அவனுடைய மடியைப் பார்த்தன. உச்ச வேக செய்தி பரிமாற்றம்.. சோதனை வெற்றி. ஹெல்மெட் உள்ளது. மடியில் உன்னுடைய இரண்டு கரங்களாலும் பிடிக்கப்பட்டு பத்திரமாக உள்ளது.
நொடி எட்டு..
பொறு… என்னது ? கைகள் இரண்டும் ஹெல்மட்டிலா ?
அவனும் மந்தப்புத்தியும் கோரசாக…
“Excuse.. கை வலிக்குது.. பிளீஸ்…” அவள் மென்மையாக..
நூறிலிருந்து பூச்சியம்… காது கேட்க மறுக்க, கண்களும் காதோடு கூட்டு சேர உண்மை உறைக்கிறது. அவனது உணர்வு………..
முடிஞ்சு போச்சு….
இது போன்ற வேறு கதைகளை வாசிக்க கதைகள் பகுதிக்கு செல்லுங்கள்
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்
முகப்பு பட உதவி : cdn