அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம்.பதின்மூன்றாவது கதை, கண்ணதாசனின் சந்தோஷம் எங்குள்ளது ? இதோ,
கண்ணதாசனின் சந்தோஷம் எங்குள்ளது ?
அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம் தான் இல்லை.தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை.மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்.
மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.
துறவறத்தில் இறங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும்‘ என்று யாரோ சொல்ல,
அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான்.
தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு,
ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன். இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே“ என்று யோகியிடம் சரணடைந்தான்.
அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார்.
கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு
ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.
செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி ‘அடடா இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே’ என்ற துக்கம்,ஆத்திரமாக மாற, அந்தச் செல்வந்தன் யோகியை
துரத்த ஆரம்பித்தான்.
யோகியின் ஓட்டத்துக்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை.
சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார்.
மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக்கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி,
என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள் “ என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.
கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்து விட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம்.
அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்.
இங்கே வருவதற்கு முன்னால் கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம் தான் இருந்தன.ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை.
இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும் தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது.”
என்று சிரித்தார்.
இதிலிருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.
சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை; மனதில் தான் இருக்கிறது.
இந்த உண்மை, செல்வத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த செல்வந்தனைப் போலவே நம்மில் பலருக்கும் கூடத் தெரியவில்லை.
அதனால் தான் நாம் பல சமயங்களில் நமது சந்தோஷத்துக்காகப் பிறரைச் சார்ந்து இருக்கிறோம்.
யோசித்தால் அமைதியும்,
சந்தோஷமும் நமக்குள்தான்
கருத்து :
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்.
ஞானத்தங்கமே.
அவர் ஏதுமறியாரடி
ஞானத்தங்கமே.
–கண்ணதாசனின் வைர வரிகள்.
இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்