இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
புதுமனைப் புகுவிழா
புதுமனைப் புகுவிழா என்பது புதியதாக வீடு கட்டி முடித்ததும் நல்ல நாள் பார்த்து அவ்வீட்டில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா ஆகும். இது பெரும்பாலும் அவரவர் சார்ந்துள்ள மதத்தின் படி செய்யப்படும் மதச்சடங்கு ஆகும். உறவினரையும், அண்டை அயலாரையும் அழைத்து பொதுவாக இவ்விழா செய்யப்படுகிறது.
புதுமனைப் புகுவிழாவன்று செய்யப்படும் பூஜை மற்றும் ஹோமம் தீய சக்திகளை வெளியேற்ற உதவுகின்றன. இந்த பூஜை நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தில் செய்யப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை கிரகப்பிரவேசம் என்றும் சொல்லுவார்கள். புதிய மனையில் (வீட்டில்) புகும் (வாசம் செய்ய நுழையும்) விழா என்று கூறுவார்கள்.
எப்படி செய்ய வேண்டும்?
புதுமனைப் புகுவிழாவின் போது வீட்டினுள் கணபதி ஹோமம் நடத்துவார்கள். இத்தகைய நிகழ்வின் போது வீட்டில் அன்று அடுப்பில் பாலைக் காய்ச்சி விருந்தினருக்குக் கொடுத்து உபசரித்து மகிழ்வார்கள்.
வீட்டினுள் குத்துவிளக்கு, நிறைகுடம், தெய்வப்படங்கள் (விநாயகர், லட்சுமி, முருகன்), கண்ணாடி, பணப்பை, உப்பு, மஞ்சள், நெல், தாம்பூலம் முதலானவைகளும் முதலில் எடுத்துச் செல்லப்படும்.
இவ்விழாவில் விருந்தோம்பல் நிகழ்ச்சி இடம்பெறும். உற்றார், உறவிர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து பால், பழம், இனிப்பு வகைகளுடன் விருந்து இடம்பெறும். வீட்டை கட்டும் பொறியாளர்கள் மற்றும் கொத்தனார்களுக்கு இத்தினத்தில் பரிசளித்து கௌரவிக்கப்படுகிறார்கள்.
மேலும் அன்று பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும்போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு மேலும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பூஜைகளும், பலன்களும்
கோ பூஜை : மகாலட்சுமி அருள் கிடைக்க கோமாதாவை பூஜிக்க வேண்டும்.
கணபதி லட்சுமி சரஸ்வதி பூஜை : இவர்களின் அருள் கிடைக்க வணங்க வேண்டும்.
கணபதி ஹோமம் : தடைகளை தகர்க்க வணங்க வேண்டும்.
நவகிரக ஹோமம் : நவகோள்களின் அருள் கிடைக்க வணங்க வேண்டும்.
லட்சுமி ஹோமம் : சம்பத்து பெற வணங்க வேண்டும்.
திருஷ்டி சுற்றல்
கிரகப்பிரவேசம் நடத்தும் தம்பதிகள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி பரிகாரமாக பூசணிக்காய் அல்லது தேங்காய் சுற்றி அதை வெளிப்புற தெருமுனையில் உடைப்பது வழக்கமாகும்.