ஒரு பெண் என்றைக்கு சாலையில் தைரியமாக நடந்து செல்கிறாரோ? அன்று தான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி,
ஆனால் மகாத்மா கூறிய சுதந்திரம் மலருமா? என்ற கேள்விக்கணைகள் நம் மார்பை துளைத்தெடுக்கிறது. இந்த கேள்விக்கு பதில் உரைக்கும் வகையிலே. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை
என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.
கயவர்களின் பிடியில் இருந்து சிறுமிகளை, குழந்தைகளை பாதுகாக்க என்ன
செய்ய வேண்டும்?
எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் துணிச்சலை சிறுமிகளிடையே ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள் தனியே பயணிக்க நேர்ந்தால். ஆட்டோ.கார் என எந்த வாகனத்திலும் ஏறும் முன்பு வாகனத்தின் எண், ஓட்டுனரின் கைபேசி
எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும்.
இதன் மூலம் ஓரளவு தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.பொது இடங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களோ. பெண்களோ யார் வழிய வந்து பேசினாலும், முகவரி கூற அழைத்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.
யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது என போதிக்க வேண்டும். பூவாக
இருக்க வேண்டிய இடத்தில் பூவாகவும், புயலாக மாற வேண்டிய சந்தர்ப்பத்தில்
புயலாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில்
நங்கூரமாக நிலை நிறுத்த வேண்டும்.
கயவர்களின் கழுகுப் பார்வையை மாற்றிட முடியாது.ஆனால் கழுகுகளின் பிடியில் இருந்து குஞ்சுகளை காக்கும் கோழிகளைப்போல் நாம் தான் நமது குழந்தைகளை பாதுகாத்திட வேண்டும்.