இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
வீட்டில் செய்யவே கூடாத பரிகாரங்கள்
நமது தோஷங்களை நீக்கக்கூடிய எந்த பரிகாரத்தையும் முறையாக நாம் செய்தால், அதற்குரிய பலன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். அதில் குறிப்பாக சில பரிகாரங்கள் கோவிலில்தான் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. அந்த பரிகாரங்களை எல்லாம் வீட்டில் செய்வதால், வீட்டில் தேவையில்லாத எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அப்படியான பரிகாரங்கள் என்னென்ன? எதற்காக அதை செய்கிறார்கள்? என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
எள் தீபம்
எள் என்பது சனிபகவானுக்கு உரிய தானியம் ஆகும். எள் தீபத்தை சனி தோஷம் இல்லாதவர்களும் சனிக்கிழமைதோறும் கோவில்களில் ஏற்றி வருவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
எள் தீபம் என்பது ஒரு கருப்பு துணியில் சிறிதளவு எள்ளை போட்டு கருப்பு நூல் கொண்டு நன்கு இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். இதனை ஒரு அகல் விளக்கு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, எள் முடிப்பை நனைத்து, அந்த கருப்பு துணியின் நுனியில் திரி போல் செய்து தீபம் ஏற்றுவது முறையாகும்.
சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுதல் என்பது கோவிலில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒரு பரிகாரம் ஆகும். இதனை வீட்டில் செய்வதால் தோஷ நிவர்த்தி தடைபடும். இதனால் மேலும் மேலும் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும்.
எலுமிச்சை தீபம்
எலுமிச்சை தீபம் என்பது செவ்வாய்க்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்க்கைக்கு செய்யப்படும் பரிகாரம் ஆகும். இவ்வாறு செய்வதால் சுபகாரியத் தடைகள் நீங்கி விடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வீட்டில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த அம்மன் அதனை தீர்த்து வைப்பாள் என்பது ஐதீகம்.
எலுமிச்சையில் இருக்கும் அதீத சக்தி, விளக்காக ஏற்றும் பொழுது பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்குகிறது. இதனை வீட்டில் ஏற்றுவது மிகவும் தவறான ஒரு செயலாகும்.
தேங்காய் தீபம்
தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம் ஆகும். பண ரீதியான தகராறுகள், பிரச்சனைகள் நீங்க தேங்காய் தீபம் போடுவது வழக்கம்.
மேலும் வேலை இல்லாதவர்களுக்கு மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு நன்மைகள் நடக்க தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். அம்பாளின் சந்நிதானத்தில் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்ய வெற்றி உண்டாகும். ஆனால் இதை வீட்டில் செய்யக்கூடாது.
சிதறு தேங்காய்
விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். செய்கின்ற காரியத்தில் ஜெயம் உண்டாக இப்படி வழிபாடு செய்வார்கள். நல்ல காரியம் நடைபெறுவதற்கு முன் சிதறு தேங்காய் உடைத்து விட்டு செய்தால் நல்லவை நல்லதாகவே முடியும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சந்நிதிக்கு சென்று தேங்காய் உடைப்பதுதான் முறையாகும். திருஷ்டிக்காக மட்டுமே வீட்டில் தேங்காயை இவ்வாறு உடைப்பது வழக்கம். பரிகாரத்திற்கு கோவிலுக்கு சென்று உடைப்பது மட்டுமே முறையாகும்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.