எங்கும் ஒரே மாதிரியான தடுப்பூசி பாஸ்போர்ட் விதிமுறைகள் இல்லை என்பதால் ஒவ்வொரு நாட்டுக்குச் செல்லும்போதும் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒருவர் தயாராக வேண்டும்.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற விஷயம் மீண்டும் உருவெடுத்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டாம், அவர்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவர்கள் அல்லர், ஹோட்டல், திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்கு இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை (அதாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை) அனுமதிக்கலாம், அவர்கள் சர்வதேச பயணங்களைத் தயக்கமின்றி மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இது வலியுறுத்தப்படுகிறது.
உருமாறிய புதிய வைரஸ்கள், கோவிட் பற்றிய பல்வேறு குழப்பங்கள் நிலவிவரும் சூழலில் தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற வரையறை சாத்தியமா, அது அவசியமானதா என்பதற்கு விடையளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் மதுமிதா.
பல நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட் அல்லது டிஜிட்டல் ஹெல்த் பாஸ்போர்ட் என்ற விஷயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். டென்மார்க்கில் கொரோனா பாஸ் என்கிறார்கள், வடக்கு ஐரோப்பா நாடான எஸ்தோனியாவில் தடுப்பூசிக் கவசம் (vaccine Guard), ஐரோப்பிய யூனியனில் டிஜிட்டல் க்ரீன் சர்டிபிகேட்.
அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாடான இஸ்ரேலில் க்ரீன் பாஸ் என்று வெவ்வேறு பெயர்களில் கொண்டு வந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரில் இது அழைக்கப்படுகிறது.
அடிப்படையில் அந்தந்த நாடுகளின் சர்வதேச எல்லைகளையும் உள்நாட்டு எல்லைகளையும் பொதுமக்கள், பயணிகள், வெளிநாட்டினர் போக்குவரத்துக்காகத் திறப்பதற்காகத்தான் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
பெயர்கள் வித்தியாசப்படுவது போலவே ஒவ்வொரு நாட்டின் விதிமுறைகளும் மாறுபட்டுள்ளன. சில நாடுகள் தங்கள் நாடுகளில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டிருக்க வேண்டும், கோவிட் பாதிப்பு உறுதி செய்ததற்கு 10 நாள்களுக்குப் பிறகு, பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று மருத்துவரின் சான்றிதழ் பெற வேண்டும் என வெவ்வேறு விதிமுறைகள் விதித்துள்ளன.
பயணத்துக்கு முன்பும் பின்பும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை, க்வாரன்டீன் போன்ற நடைமுறைகளைக் குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் வலியுறுத்தப்படலாம்.
சிக்கல் என்ன?
எங்கும் ஒரே மாதிரியான தடுப்பூசி பாஸ்போர்ட் விதிமுறைகள் இல்லை என்பதால் ஒவ்வொரு நாட்டுக்குச் செல்லும்போதும் அந்தந்த நாட்டின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒருவர் தயாராக வேண்டும். ஒரு நாட்டில் கொடுக்கப்படும் டிஜிட்டல் சான்றிதழை மற்றொரு நாடு அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அனைத்து நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா என்றால் இல்லை.
ஒருவர் தங்கள் நாட்டில் அங்கீகரிக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பார். அந்தத் தடுப்பூசியை அவர் பயணிக்க விரும்பும் நாடு அனுமதிக்கவில்லை என்றால் அவர் அந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேறு தடுப்பூசியை குறுகிய காலத்தில் போட்டுக்கொள்ளலாமா என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
தென் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டுமென்றால் மஞ்சள் காய்ச்சலுக்கான ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது விதி. அந்தத் தடுப்பூசி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. ஒருநாட்டில் அதைச் செலுத்திக்கொண்டால் வழங்கப்படும் சான்றிதழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும். ஆனால், கோவிட்-19 தடுப்பூசிகள் அனைத்துக்கும் அவசர கால பயன்பாடு என்ற அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பலவிதமான கோவிட்-19 தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தில் உருவானது. ஒரே வகையான தடுப்பூசி இல்லை எனும்போது ஒருவரை தடுப்பூசி பாஸ்போர்ட் பெறுவதற்காக நிர்ப்பந்திக்க முடியாது.
நடைமுறை சிக்கல்கள் அதிகம்!
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்று ஏற்படாது என்று 100% உறுதியளிக்க முடியாது. வைரஸ்கள் பொதுவாக உருமாறிக்கொண்டே இருக்கும் என்பதால் தடுப்பூசி முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கும் என்று கூற முடியாது. உருமாறியதற்கு எதிராக அதிகபட்சம் 90% பாதுகாப்பை அளிக்கலாம்.
அதேபோல தடுப்பூசியால் கோவிட் தொற்றுக்கு எதிராக உடலில் உருவாகும் ஆன்டிபாடியின் எண்ணிக்கை, தரம் என்பது நபருக்கு நபர் வேறுபடும். மேலும், நோய் எதிர்ப்புத் திறன் எத்தனை நாள்கள் ஒருவரின் உடலிலிருக்கும் என்பதை உறுதிசெய்யும் ஆய்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதுபோன்ற விஷயங்களால் தடுப்பூசி பாஸ்போர்ட்டின் அவசியம் கேள்விக்குறியாகிறது.
அவசர கால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஒருவரை நிர்ப்பந்திக்க முடியாது. சிலருக்குத் தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்படலாம், அவர்களை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
ஆனால், அந்த நபர் குறிப்பிட்ட நாட்டுக்குப் பயணிக்க வேண்டும் என்றால் அவரைத் தடுப்பூசி பாஸ்போர்ட் கேட்டு நிர்ப்பந்தித்தால் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் அதிகமுள்ளதால் தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற கான்செப்ட் அனைவருக்கும் பொதுவானதாக இருக்காது.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஒரே மாதிரியான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். இதுவரை அதுபோன்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. தேசிய மற்றும் சர்வதேச அளவில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் தடுப்பூசிச் சான்றிதழ் உருவாக்கும் பணிகளில் உலக சுகாதார நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. அது அமுலாகும் பட்சத்தில் அனைத்து நாடுகளும் பின்பற்றக்கூடிய கோல்ட் ஸ்டாண்டர்டு சான்றிதழாக அவை அமையும்.
தீர்வு என்ன?
பெருந்தொற்றுக் காலத்தைப் பொறுத்தவரை ஒருவரைப் பாதுகாக்க தடுப்பூசி அவசியம். அதனால் தங்களுக்குக் கிடைக்கும் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொள்கின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற விஷயத்தைப் புகுத்தி பொருந்தாத விதிமுறைகளைப் போடுவது சரியல்ல.
கோவிட்-19 தொற்றைத் தடுப்பதற்கு மாஸ்க் அணிதல், கைகழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய மூன்றையும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி என்பது உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு உதவும். எனவே, கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தனிநபர் பொறுப்பு என்பதுதான் முக்கியமான அம்சம். அதை அனைவரும் சமரசமின்றி கடைப்பிடித்தாலே இதுபோன்ற நடைமுறைகள் அவசியமில்லாமல் போய்விடும்” என்கிறார்.
தகவல் உதவி : தொற்றுநோய் மருத்துவர் மதுமிதா.