இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
வளைகாப்பு
வளைகாப்பு விழாவானது கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்படும் விழாவாகும். கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் நடைபெறும்.
வளைகாப்பு செய்யும் முறை
முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5ஆம் மாதம், 7ஆம் மாதம், 9ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்த்தப்படுகிறது வளைகாப்பு.
வளர்பிறையில் நாள் பார்த்து, அதிகாலையில் தட்டுகளில் வளையல்கள், பூ மற்றும் மங்கள பொருட்களை வைத்து பின் கருவுற்ற பெண்ணை நாற்காலியில் அமர வைப்பார்கள்.
பெண்ணிற்கு வளையல் அணிவிக்கும் முன் வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள். பின்பு பெண்ணின் கூந்தலுக்கு மல்லிகை அல்லது முல்லை பூ சூடுவார்கள். பின் ஒவ்வொரு பெண்ணாக வந்து கருவுற்ற பெண்ணுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு, வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்துவார்கள்.
திருமணம் ஆகி கருவுறதா பெண் ஒருத்திக்கு துணை காப்பு போடுவார்கள். பெண்ணின் ஒரு கையில் இரட்டை படையிலும், மற்றொரு கையில் ஒற்றை படையிலும் வளையல் அணிவிப்பர்.
இறுதியாக அனைவருக்கும் ஐந்து அல்லது ஒன்பது வகையான சாதம் பரிமாறுவார்கள். இது வளைகாப்பு செய்யும் சம்பிரதாயம் ஆகும்.
வளைகாப்பு செய்வது ஏன்?
கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கியச் சடங்கு வளைகாப்பு.
கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்து, குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும்.
வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும், தாயையும் வாழ்த்துவதால் பெண்ணுக்குள் இருக்கும் பயம் குறைந்து மிகவும் சந்தோஷமும், மனதைரியத்துடனும் இருப்பாள்.
கர்ப்பிணிகள் படுக்கும் போது வளையணிந்த கைகளை தன் வயிற்றின் மீதே வைத்துக் கொள்வார்கள். அந்த ஓசையை கருவில் இருக்கும் குழந்தை கேட்டு கேட்டுத் தன் தாயை அடையாளம் காண்கிறது. மானசீகமாக வயிற்று சிசுவிற்கு மனமும், சிந்தனையும் உண்டு என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
கர்ப்பிணிகளை திட்டவோ, கஷ்டபடுத்தக்கூடாது என்று சொல்வதற்கும் காரணம் உண்டு. அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஊனமில்லாமல் சுபமாக பிறப்பதற்காகவே அவ்வாறு கூறுகின்றனர். தாய் மனம் சந்தோஷத்துடன் இருந்தால் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பதற்காகவே சீமந்தம் நடத்துகின்றனர்.
வளைகாப்பு வைக்க உகந்த நாள்
வளர்பிறையில், பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய், சனி, ஞாயிறு தவிர்த்த கிழமைகளில் செய்வது நல்லது.
மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்கள் கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா