தினமும் நமக்கு ஏன் எதற்கென்றில்லாமல் எக்கச்சக்கமாக கோபம், மன அழுத்தம் என்பன வருகின்றன. இதனால் நம் குடும்பம் மற்றும் சூழலோடு இயல்பாக இருக்க முடிவதில்லை. இதனை விட்டு வெளியே வர சில உதவிக்கு குறிப்புக்கள் இதோ…
கோபம் மற்றும் மன அழுத்தம் ஆகியன விலக உதவிக் குறிப்புகள்
நல்ல கருத்துக்களோடு இருக்கும் சமூக தத்துவ/ இறைமதிப்பு கருத்துள்ள, மகிழ்ச்சியாக ஒலிக்கும் பாடல்களைக் கேளுங்கள். மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு நல்ல வார்த்தைகளை பிறருக்கு மனதார சொல்லுங்கள். பிறர் பற்றி குறைகள் பேசும் இடத்தில் கலந்து கொள்ளாதீர்கள்.
தவறானவற்றை செவிமடுக்காதீர்கள் பிறர் உங்கள் மனதை நிலைகுலைய வைத்தால் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள். அது உங்கள் மூத்த அதிகாரியாக இருந்தால் உங்கள் மனதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்.
எதற்கும் கவலைப்படாதீர்கள். கவலைப்படக் கூடிய சூழ்நிலையாக இருந்தாலும் சரி எல்லா பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக சூழ்நிலையை கடந்து செல்லுங்கள். எல்லாம் தன்னுடைய விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.முதலில் பிறருக்கு விருப்பமான முறையில் நான் நடக்கின்றேனா என சுயசோதனை செய்யுங்கள். ஒருவேளை உங்கள் செயல்கள் பிறருக்கு பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றிக் கொள்ள முற்படுங்கள். தன்னிடம் உள்ள குறைகளை அமைதியாக சிந்தித்து சீர்திருத்தி கொள்ளுங்கள்.ஒருவேளை உங்களுக்கு பிறருடைய குறைகள் தென்பட்டால் அவருக்காக நல்ல எண்ணம் வையுங்கள். அவர் நல்ல விதத்தில் மாறுவதற்காக இறைவனைப் பிரார்த்தியுங்கள்.
மனதிற்கு அமைதியான இசையை கேளுங்கள். மனதை ஒரு நிலை படுத்திக்கொள்ளுங்கள். ஒரு போதும் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளை திரும்பத் திரும்ப அசை போடாதீர்கள்.உங்களிடம் யாராவது உங்கள் உணர்வுகளை தூண்டும் படி ஆவேசம் கோபம் வரும்படி பேசினால் அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். அவர் மனதில் அந்த ஆவேசமும் கோபமும் நீங்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த சூழ்நிலையின் குப்பையை உங்கள் மனதில் வைக்காதீர்கள்.
எல்லாம் ஒரு நாள் அழியக்கூடியது. கோபம் கொண்டவனுக்கும் ஒரு முடிவு வரும். அமைதியாக இருந்தவனுக்கும் ஒரு முடிவு வரும்.எல்லாம் சிறிது கால நேர ஆட்டம். அந்த ஆட்டத்தை அன்புடன் நிறைவு செய்யுங்கள். சூழ்நிலையை அன்பாக கடப்பது தான் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு.
நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நடந்தால் நன்மைக்கு. நடக்கவில்லை என்றால் அதுவும் ஒரு நாள் நன்மைக்கே என தெரிய வரும். அதனால் எல்லாவற்றிலும் நன்மையே என்று ஆனந்தம் கொள்ளுங்கள். முடிந்தவரை மௌனமாக இருக்க பழகுங்கள். தேவையான சொற்களை மட்டுமே பேசுங்கள். தேவையற்ற குப்பைகளை மனம் சொல் செயலில் நீக்கிவிடுங்கள். பிறர் குப்பைகளை போட நீங்கள் குப்பைத்தொட்டி இல்லை என்பதை உணருங்கள்.
கோபம், தற்புகழ்ச்சி, குற்றப் பார்வை, குற்றமான எண்ணங்கள், விரோதம் பொறாமை, பொய், சூது, வஞ்சகம், பழிவாங்குதல் தர்மத்தை மீறிய எண்ணங்கள் இவையெல்லாம் எங்கு இருக்கின்றதோ அங்கே கண்டிப்பாக அமைதி இருக்காது. சுயநலமற்ற அன்பை வெளிப்படுத்துங்கள். சுயநலமற்ற சேவையை காரியத்தில் கொண்டு வாருங்கள்.பிறரின் தவறுக்காக நீங்களும் தவறு செய்து உங்களை தண்டித்துக் கொள்ளாதீர்கள்.
வறட்சியான அமைதியாக இருக்காதீர்கள். ஆனந்தமான மௌனமாக இருங்கள். அந்த மௌனத்தில் உங்கள் சுயத்துடன் இணைந்திருங்கள்.அப்பொழுது உங்கள் முகத்தில் அமைதி வெளிப்படும். அந்த அமைதியை பார்ப்பவர்கள் ஆவேசமாக வந்தாலும் குளிர்ந்து விடுவார்கள். பிறரை குளிர்விக்க நீங்கள் உங்களைப் பற்றிய நினைவில் இருந்தால் போதுமானது.சுயத்தின் வெளிப்பாடு எப்பேற்பட்டவரையும் அமைதிஅடைய செய்துவிடும்.
எதையும் விரும்பாதீர்கள் எதையும் வெறுக்காதீர்கள்.விரும்பிய பொருளால் பற்று ஏற்படலாம்.வெறுத்த பொருளால் நிம்மதியை இழக்கலாம். எனவே எல்லாவற்றின் மீதும் சமநிலையான அன்பு வையுங்கள்.எங்கே சமநிலை இல்லையோ அங்கே தான் பிரச்சினைக்குரிய சமாச்சாரம் உருவாகின்றது.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற வேறு கட்டுரைகளுக்கு எமது உளச்சுகாதரம் பகுதியை நாடுங்கள்.