அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம். முதலாவது கதை, குதிரைக்காரனும் குருவும் இதோ,
குருவும் குதிரைக்காரனும் – அளவோடு பேசுங்கள்
ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தார்கள்.
பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அவரை அழைத்து வர ஒரு குதிரைக்காரன் போயிருந்தான். அன்றைக்கென்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கலைந்து எல்லோரும் போய் விட்டார்கள்.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசவதற்காக நிறையத் தயார்செய்து வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கும் ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் செய்யவும் மனம் வரவில்லை.
என்னப்பா செய்யலாம் ? என்று கேட்டார்.
அதற்கு குதிரைக்காரன்,
அய்யா! நான் குதிரைக்காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ என்றான்.
கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது சுவாமிக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டு விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதமாக பேசினார் குரு. பிரசங்கம் முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு? என்று அவனைப் பார்த்து பெருமையாக கேட்டார் குரு.
அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்! என்றான்.
அவ்வளவுதான்:அவருக்கு கை கால் தெரியவில்லை.
என்ன மக்களே கதை முடிந்தது நீதியைக் கேளுங்களேன்.
நீதி :
மற்றவர்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதனை சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொல்ல வேண்டும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை நமக்குத் தெரியும் என்பதற்காக சொல்வது நம்மை தான் முட்டாளாக்கும்.
பேச்சை உங்களுக்கு கிடைத்த செல்வமாகப் பாவியுங்கள். அளவுக்கு மிஞ்சி நம்மிடம் இருக்கும் இதன் அருமையும் நமக்குத் புரிவதில்லை. பேசலாம் என்பதற்காகப் பேசாமல் எது எங்கே எவ்வளவு தேவையோ அங்கே அதைப் பேசவும்.
இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்
பட மூலம் : iStock