கேள்வி : எங்கள் வீட்டில் 90 வயது மாமனார் இருக்கிறார். அவருக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் வேலைக்குச் சென்று வரும் வீட்டிலுள்ள மற்றவர்களால் அவருக்குத் தொற்று பாதிக்க வாய்ப்புகள் உள்ளனவா? மாமனாரின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?
பதில் : சொல்கிறார் சென்னை தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் மாமனார் தவிர்த்த மற்ற எல்லோருக்கும் தடுப்பூசி போடுவதை வலியுறுத்துவதைத் தான்.
அதாவது, தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், இம்யூனோ சப்ரசென்ட் நோயாளிகள் போன்ற அனைவருக்கும் இந்த முறையில் ஓரளவு பாதுகாப்பு அளிக்கலாம்.
வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நோய்த்தடுப்பாற்றலே, தடுப்பூசி போடாத அந்த நபரை, தொற்று பாதிப்பிலிருந்து காப்பாற்றிவிடும். இதை `இம்யூனிட்டி ரிங்’ அதாவது, பாதுகாப்பு வளையம் என்று சொல்கிறார்கள்.
எந்தவொரு தடுப்பூசியும் 100 சதவிகிதம் பலன் தராது. 80 முதல் 90 சதவிகிதம்தான் வேலை செய்யும். அதாவது 10 பேருக்குத் தடுப்பூசி போடும்போது ஒன்றிரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பாற்றால் வராமலிருக்கலாம். ஆனால், மீதமுள்ள 8 – 9 நபர்களால், நோய் எதிர்ப்பாற்றல் வராத நபரும் பாதுகாக்கப்படுவார்.
எனவே, உங்கள் வீட்டில் தடுப்பூசி போடத் தகுதியான அனைவரும் தாமதிக்காமல் அதைப் போட்டுக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மாமனாருக்குப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொடுங்கள்.
கேள்வி : கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது என்றால் அந்த வைரஸ் அவர் உடலுக்குள் போய்விட்டது என்று அர்த்தம். அந்த வைரஸ் உள்ளே போய் தன்னால் முடிந்த அளவுக்கு அந்த உடலுக்குள் சேதங்களை ஏற்படுத்தப் பார்க்கும்.
சில நேரம், நம்முடைய இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் அந்த வைரஸ் நம் உடலைப் பெரிய அளவில் பாதிக்காமல் பாதுகாக்கும். அப்போது அந்த வைரஸ் செயலிழந்து போகும். செயலிழந்த அந்த வைரஸ் உடலைவிட்டு வெளியே வரவோ, அடுத்தவருக்குத் தொற்றவோ வாய்ப்புகள் கிடையாது.
ஆனால் வைரஸ் உடலுக்குள் புகுந்த முதல் ஐந்து- ஆறு நாள்களான இன்ஃபெக்டிவ் ஸ்டேஜ் எனப்படும் காலத்தில் தொற்று பாதித்தவரிடமிருந்து இன்னொருவருக்கும் அது பரவும்.
ஆனால் தொற்றுக்குள்ளான நபர், முழுமையான சிகிச்சையின் மூலம் குணமான பிறகு அவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவது அரிதினும் அரிது.
ஒருவேளை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அதை வெளியே சொல்லாமல், க்வாரன்டீனில் இல்லாமல், அறிகுறிகளை அலட்சியப்படுத்தியும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் இருந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.
தொற்று வந்து சிகிச்சை எடுப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு க்வாரன்டீனில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரிடமிருந்து அவரின் குடும்ப நபர்கள் உள்ளிட்ட யாருக்கும் தொற்று பரவாமலிருக்கும்.
கேள்வி : என் மனனவிக்கு சளித் தொல்லை இருக்கிறது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
சளித்தொல்லை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது சைனஸ் பாதிப்பா, டஸ்ட் அலர்ஜியா அல்லது ஆஸ்துமா பாதிப்பா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.எந்தக் காரணமாக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
கேள்வி : ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
உலக அளவில் ஆஸ்துமா, அலர்ஜி என்பது பரவலாகக் காணப்படுகிற ஒரு நோய். அதாவது 18 முதல் 20 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அந்த 18 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடாமலிருக்க முடியுமா? இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத்தான் அவசியம் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்துமா, நீரிழிவு, சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று பாதித்தால் அதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும்.
ஆஸ்துமா நோயாளிகளைப் பொறுத்தவரை அந்த நோய்க்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ளாமல், கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது.
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோயாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போதும் ஆஸ்துமாவுக்கான மருந்துகளை நிறுத்த வேண்டாம்.
இது போன்ற கோவிட் -19 உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்.